தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, பொது இடங்களில் மத்திய அரசின் சாதனைகள் குறித்த விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகார் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசு செய்த சாதனைகள் குறித்து பொது இடங்களில் விளம்பர பதாதைகள் வைக்கப்பட்டுள்ளது எங்களுக்கு தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக, நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்கள் அருகே, அரசின் சாதனைகள் குறித்து பதாகைகள் வைத்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு பொதுஇடங்களில் அரசின் சாதனைகளை விளம்பரம் செய்வது தேர்தல் நடத்தை விதிகளுக்கு புறம்பானதாகும்.
அதுமட்டுமன்றி மக்களின் பணத்தையும், அரசு இடங்களையும், பிரசாரத்துக்காக தவறாக பயன்படுத்துகின்றனர். அதனால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் உள்ள அரசு விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கவுள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசின் சாதனை விளம்பரங்கள், சுவர்களில் வரையப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் சின்னங்கள், சுவரொட்டிகள் ஆகியவை அகற்றப்படவேண்டும்.