புது தில்லி: ராணுவம் என்பது மோடியின் படை என்ற உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு கண்டனங்கள் வலுக்கின்றன.
விரைவில் மக்களைவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய பாதுகாப்பு படைகளை தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தில்லியில் பாஜக பேரணியின் போது விமானப்படை வீரர் அபிநந்தனின் புகைப்படம் இடம்பெற்ற பேனர்கள் வைக்கப்பட்டது. மேலும் பா.ஜனதா வெளியிட்ட ‘நானும் காவலாளி’ விடியோவிலும் ராணுவம் இடம்பெற்றது. இதன் காரணமாக பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
இந்நிலையில் ராணுவம் என்பது மோடியின் படை என்ற உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு கண்டனங்கள் வலுக்கின்றன.
உ.பி.யில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், காங்கிரஸ் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி கொடுத்தது, ஆனால் மோடியின் ராணுவம் அவர்களுக்கு புல்லட் மற்றும் வெடிகுண்டுகளை பரிசாக வழங்கியது.என்று பேசியிருந்தார்.
இந்திய பாதுகாப்பு படைகள் பிரதமரின் படைகள் கிடையாது. இந்த பேச்சுக்கு யோகி ஆதித்யநாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் சமூக வலைத்தளங்களிலும் யோகியின் இந்த பேச்சு பலத்த கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.