கவுகாத்தி: அசாம் போக்குவரத்துக் காவலர் ஒருவர் பணியிலிருக்கும் போது எடுக்கப்பட்ட விடியோ ஒன்றினால், அவர் ஒரே நாளில் சமூக வலைதள ஸ்டார் ஆகி விட்டார்.
அசாம் மாநிலப் போக்குவரத்து காவல்துறையில் காவலராகப் பணியாற்றி வருபவர் மிதுன் தாஸ். ஞாயிறன்று அங்கு காற்றுடன் கூடிய கடும் மழை பெய்த நிலையில், கவுகாத்தி நகரத்தின் முக்கிய சந்திப்பு ஒன்றில் பணியில் இருந்த மிதுன் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தனது கடமையை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அவ்வழியாக சென்ற பனஜீத் தேகா என்பவர் அதனை விடியோவாக எடுத்து மாநில காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த விடியோவை மாநில காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
அர்ப்பணிப்பு என்பதே உனது பெயர்.
அசாம் மாநில காவல்துறையில் பணியாற்றும் காவல் மிதுன் தாஸிற்கு, தனது கடமையில் அவரது தீவிர பக்திக்காகவும், எவ்வாறு கடமையின் மூலம் ஒரு கடும் மழையையும் இனிய தூறலாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதைக் காட்டியமைக்காகவும் எங்களது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்த்துக்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடியோவின் காரணமாக அந்த காவலர் சமூக வலைத்தளங்களில் புகழ்பெற்றுளார்.
மாநில காவல்துறை தலைவரான குலாதர் சைக்கியாவும் காவலர் மிதுன் தாஸிடம் பேசி அவரை பாராட்டியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.