புது தில்லி: கேரள மாநிலம் வயநாட்டில் ராகுலுக்கு எதிராகப் போட்டியிடப் போவது யார்? என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள அமேதி மக்களவைத் தொகுதி, ராகுல் காந்தியின் பாரம்பரிய தொகுதியாகும். இத்தொகுதியில் வரும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதேபோல், 2ஆவது தொகுதியாக தென் மாநிலங்கள் ஏதேனும் ஒன்றில் ராகுல் காந்தி போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை தில்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சருமான ஏ.கே. அந்தோணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.
இந்நிலையில் வயநாட்டில் ராகுலுக்கு எதிராகப் போட்டியிடப் போவது யார்? என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
வயநாடு தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாரத தர்ம ஜன சேனா அமைப்பின் தலைவரான துஷார் வெல்லப்பலி போட்டியிடுவார் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறேன். துடிப்பான, இளமையான மற்றும் செயல்திறம் மிக்க தலைவரான அவர், வளர்ச்சி மற்றும் சமூக நீதி தொடர்பான எங்களது கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார். இத்துடன் கேரளாவின் மாற்று அரசியல் சக்தியாக தேசிய ஜனநாயக கூட்டணி உருவெடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் கேரளாவில் பாஜ கட்சியானது பாரத தர்ம ஜன சேனா மற்றும் கேரள காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.