புல்வாமாவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கவாதிகளை சுட்டுக்கொன்றனர் பாதுகாப்புப்படையினர்.
பாகிஸ்தானில் இந்திய விமானப்படையின்ர் நடத்திய அதிரடி தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நேற்று காலை ரஜோரி மாவட்டம் நவுசாரா எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து சிறிய ரக வெடிகுண்டுகள், ஆயுதங்கள் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் லசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுக்கு வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். இந்த தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் அவர்களிடம் இருந்த துப்பாக்கிள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.