பாஜக ஆட்சியில் நக்ஸல் தீவிரவாதம் வலுவிழப்பு!: பிரதமர் மோடி பெருமிதம்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், நக்ஸல் தீவிரவாதம் வலுவிழந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் நக்ஸல் தீவிரவாதம் வலுவிழப்பு!: பிரதமர் மோடி பெருமிதம்


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், நக்ஸல் தீவிரவாதம் வலுவிழந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஒடிஸா மாநிலம், காளஹண்டி மாவட்டத்திலுள்ள பவானிபட்டணம் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, ஒடிஸாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசை மோடி கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது:
ஒடிஸாவின் வளர்ச்சிக்காக, மத்திய அரசுக்கு மாநில அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனினும், மத்திய அரசின் திட்டங்களின் மூலம் இம்மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஒடிஸாவில் கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே பாஜக ஆட்சியமைத்திருந்தால், அனைத்து துறைகளிலும் மாநிலம் வேகமாக முன்னேறியிருக்கும்.
ஒடிஸாவில் மத்திய அரசு சார்பில் 8 லட்சம் குடும்பங்களுக்கு தரமான வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 24 லட்சம் குடும்பங்களுக்கு மின் இணைப்பு, 40 லட்சம் பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 50 லட்சம் வீடுகளில் கழிப்பறைகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
பழங்குடியினர் நலன்: பழங்குடியினர் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 30 சதவீதம் உயர்த்தியிருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை, குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்ட வனம் சார்ந்த பொருள்களின் எண்ணிக்கை 10-ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 50-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, பழங்குடியினரின் வருவாயை உயர்த்துவதற்கான நடவடிக்கையாகும். மேலும், பழங்குடியின குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதற்காக, நாடு முழுவதும் சுமார் 400 ஏகலைவன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் பழங்குடியின மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், பழங்குடியினர் நலனுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்தினார் என்றார் மோடி.
காளஹண்டி மாவட்டத்தில் கடந்த 2016-இல், தனா மாஜி என்ற பழங்குடியின நபர், தனது மனைவியின் சடலத்தை ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல வசதியில்லாததால், 12 கி.மீ. தொலைவுக்கு தோளில் சுமந்து சென்றார். இச்சம்பவத்தை குறிப்பிட்டு, பிரதமர் மோடி பேசியதாவது:
பிஜு ஜனதா தளம் அரசு, ஏழை பழங்குடியினருக்கு துரோகம் இழைத்துவிட்டது என்பதற்கு மேற்கண்ட சம்பவமே உதாரணம். ஏழை மக்களுக்கு எதிரான பிஜு ஜனதா தளம் அரசு, சுரங்க முறைகேடு, நிதி நிறுவன மோசடிகளில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கிறது.
இடைத்தரகர்களின் ஆதிக்கத்துக்கு முடிவு: முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இடைத்தரகர்கள் மட்டுமே பலனடைந்துவந்தனர். ஏழை மக்களுக்காக மத்திய அரசு ஒதுக்கும் ஒரு ரூபாயில் வெறும் 15 பைசா மட்டுமே அவர்களை சென்றடைவதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியே ஒரு முறை குறிப்பிட்டார். இடைத்தரகர்களின் பிரச்னையை அவர் அறிந்திருந்த போதிலும் அதற்கு தீர்வு காண்பதில் தோல்விகண்டுவிட்டார்.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கான நிதி, அவர்களை முறையாக சென்று சேருவதை உறுதி செய்திருக்கிறோம். 8 கோடி போலி ரேஷன் அட்டைகள், எரிவாயு இணைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை விரும்பாத எதிர்க்கட்சிகள் என் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. ஆனால், அந்த விமர்சனங்கள் அனைத்தையும் அணிகலன்களாக ஏற்றுக் கொள்கிறேன்.
மத்திய பாஜக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் நாட்டில் நக்ஸல் தீவிரவாதம் வலுவிழந்துவிட்டது. இளைஞர்கள் வன்முறையை பாதையை கைவிட்டு, ஆக்கப்பூர்வ செயல்பாடுகளில் பங்கேற்று வருகின்றனர். நாட்டில் பெரும் மாற்றத்தை கொண்டு வருவதற்காக, விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகிறேன் என்றார் மோடி.
பாகிஸ்தானின் செய்தித்தொடர்பாளர்கள்: இதைத் தொடர்ந்து, பிகார் மாநிலம், ஜமுய் நகரில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாலாகோட் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்ட எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார்.  நமது நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள், பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளர்கள் போல செயல்பட்டு வருகின்றனர். நமது பாதுகாப்புப் படையினரின் துணிவை சந்தேகிக்கும் அக்கட்சிகள், ஆட்சிக்கு வர வேண்டுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com