வயநாடு தொகுதி மக்களை ராகுல் கைவிடமாட்டார் என அவரது சகோதரியும், உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா வதேரா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், வியாழக்கிழமை (ஏப்.4) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வயநாடு வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேரணியாக சென்றார். அப்போது ராகுலின் தங்கையும், உத்தரப்பிரதேச காங்கிரஸ் செயலாளருமான பிரியங்கா வதேரா உடனிருந்தார். இதுகுறித்து பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
எனது சகோதரரும், உண்மையான நண்பருமான, நான் இதுவரை கண்டதிலேயே துணிவான ஆண்மகனுமான ராகுல், இங்கு போட்டியிடுகிறார். வயநாடு மக்களாகிய நீங்கள் அவரை எந்த சூழலிலும் கைவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், ராகுலும் உங்களை எப்போதும், எந்த சூழலிலும் கைவிடமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி மட்டுமல்லாது கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.