புது தில்லி: வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டமானது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும்.
அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி வியாழனன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு வியாழன் அன்று மீண்டும் கூடியது. வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வேண்டும் என்னும் தீர்மானத்திற்கு குழுவில் உள்ள 4 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. எனவே தற்போது இது 6 சதவீதமாக உளது.
இதன் தொடர்ச்சியாக வர்த்தக வங்கிகளும் வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.