சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், அவரது தந்தை முலாயம் சிங் யாதவும், பாஜகவின் முகவர்கள் போல செயல்படுகின்றனர் என்று பீம் ஆர்மி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்தார்.
வாராணசி மக்களவைத் தொகுதியில் தான் போட்டியிடுவது பிரதமர் மோடிக்கு சாதகமாக அமையுமெனில், போட்டியில் இருந்து விலகத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, வாராணசி தொகுதியில் போட்டியிடப் போவதாக சந்திரசேகர் ஆசாத் தெரிவித்திருந்தார். ஆனால், அத்தொகுதியில் தலித் வாக்குகளை பிரிக்கும் நோக்கில் பாஜக இத்தகைய சதியை மேற்கொண்டுள்ளதாகவும், சந்திரசேகர் ஆசாத் பாஜகவின் முகவர் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சந்திரசேகர் ஆசாத், தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:
அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது, தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகளை அரங்கேற்றிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை அளித்தார். அவரது தந்தை முலாயம் சிங், நாடாளுமன்றத்தில் பேசும்போது, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்கிறார். அவர்கள்தான் பாஜகவின் முகவர்கள்; நான் அல்ல.
அவர்களைப் பற்றி கேள்வி எழுப்பியதால் என்னை பாஜக முகவர் என்கின்றனர். நான் அம்பேத்கரின் முகவர். எங்கள் மக்கள் எனது வழியில் குறுக்கிடாமல் இருந்திருந்தால், நாங்கள் வாக்களித்து நீங்கள் ஆட்சிக்கு வர முடியும் என்றபோது, அதே சூழலில் உங்களை ஆட்சியை விட்டு இறக்கவும் முடியும் என்பதை நிரூபித்திருப்பேன்.
மீண்டும் பரிசீலிப்பேன்: வாராணசியில் நான் போட்டியிடுவது மோடிக்கு சாதகமாக அமையும் என்றால் போட்டியில் இருந்து விலகத் தயார் என்றார் சந்திரசேகர் ஆசாத்.
பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச்செயலாளரான சதீஷ் சந்திர மிஸ்ராதான், தன்னைப் பற்றி மாயாவதியிடம் தவறான கண்ணோட்டத்தை உருவாக்கியவர் என்றும் சந்திரசேகர் ஆசாத்
குற்றம்சாட்டினார்.