இந்திய பாதுகாப்புப் படைகள், எத்தகைய தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான பஞ்சாப் மாநில எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் திங்கள்கிழமை தென்பட்டது. இதை இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்தன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து எல்லையில் பதற்றம் நிலவிய நிலையில், இந்த சம்பவத்தை அந்த பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்த நிர்மலா சீதாராமனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
இந்தியாவும், இந்திய பாதுகாப்புப் படைகளும் முழு அளவில் தயார் நிலையில் உள்ளன. இந்த சம்பவம் வெறும் உதாரணம்தான். எல்லையில் எத்தகைய தாக்குதல் நடைபெற்றாலும், இதேபோல் பதிலடி கொடுக்க தயார் நிலையில் நமது வீரர்கள் உள்ளனர். இந்தியா பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்றார் அவர்.