மனைவியின் கொடுமையால் பாதிக்கப்பட்ட கணவர்களுக்கான தன்னார்வ அமைப்பின் தலைவர், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் அகில பாரதிய பத்னி அத்யசார் விரோதி சங்கம் என்ற தன்னார்வ அமைப்பு செயல்படுகிறது. மனைவி, அவரது குடும்பத்தினரின் கொடுமையால் பாதிக்கப்பட்ட கணவர்களுக்கு உதவுவதற்காக, இந்த தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவரான தசரத் தேவ்தா, ஆமதாபாத் கிழக்கு மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது தன்னார்வ அமைப்பில் 69,000 பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் எனக்கு 2,300 ஓட்டுகள் கிடைத்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நரோடா தொகுதியில் போட்டியிட்ட எனக்கு 400 ஓட்டுகள் கிடைத்தன.
மற்ற வேட்பாளர்களைப் போல், பிரசாரத்துக்கு நான் அதிகம் செலவு செய்வதில்லை. நான் வீடு வீடாகச் சென்று, தேர்தலில் வெற்றி பெற்றால், பாதிக்கப்பட்ட கணவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று வாக்குறுதி அளித்து வாக்கு சேகரிப்பேன்.
ஆணும், பெண்ணும் சம உரிமை பெற வேண்டும். ஆண்டுதோறும் மனைவியின் கொடுமையால் நூற்றுக்கணக்கான கணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். குடும்ப வன்முறைச் சட்டம், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்றார் அவர்.