
இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக உள்ளது என்று பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஆதித்யநாத், காங்கிரஸார் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வழங்குவார்கள்; ஆனால், பிரதமர் மோடியோ அவர்களை ஒடுக்க வெடிகுண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையுமே பரிசாக வழங்குகிறார். இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் சேனையாக (ராணுவமாக) உள்ளது. இதுவே, காங்கிரஸ் அரசுக்கும், பாஜக அரசுக்கும் இடையே உள்ள வேறுபாடு. அவர்கள் (காங்கிரஸார்) பயங்கரவாதி மசூத் அஸாரை ஊக்குவிக்கும் வகையில் ஜி என்று மரியாதையுடன் அழைக்கின்றனர் என்ற பேசினார்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆதித்யநாத்தின் பேச்சு அடங்கிய விடியோவை அளிக்குமாறு காஜியாபாத் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி அனுப்பப்பட்ட விடியோவை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், யோகி ஆதித்யநாத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.