புனே: நான் நரேந்திர மோடியை விரும்புகிறேன் என்று கல்லூரி மாணவர்களிடம் ராகுல் பேசியது கலகலப்பை உண்டாக்கியுள்ள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலம் புனே அருகில் உள்ள ஹடாப்சர் என்னும் பகுதியில் கல்லூரி மாணவர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடிய நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. சுமார் 5000 மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வை காங்கிரஸ் எம்.எல்.ஏ விஸ்வஜித் காதம் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வை மும்பையைச் சேர்ந்த வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மலிஷ்கா மென்டோன்சா மற்றும் புகழ்பெற்ற மராத்தி நடிகர் சுபோத் பவே இருவரும் தொகுத்து வழங்கினார்.
சுமார் 75 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்கள் ராகுலிடம் கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் தொடர்பான கேள்விகள் மற்றும் சில தனிப்பட்ட கேள்விகளையும் எழுப்பினார்கள். அதற்கு அவர் மிகுந்த கலகலப்பாக பதில் அளித்தார். அப்போது மோடி குறித்து மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ராகுல் அளித்த பதிலாவது:
நான் நரேந்திர மோடியை விரும்புகிறேன். நான் நிஜமாகவே தீவிரமாகத்தான் சொல்கிறேன். எனக்கு அவர் மேல் எந்தக் கோபமும் இல்லை. நான் அவரை விரும்புகிறேன். ஆனால் அவருக்கு என் மேல் கோபம்தான் உள்ளது.
இவவறு அவர் தெரிவித்தார்.
அவரது இந்த பதிலுக்கு மாணவர் கள் கரகோஷம் எழுப்பி பாராட்டுத் தெரிவித்தனர். நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர்களும் ஊடகத் துறையினரும் அவரது பதிலால் வியப்படைந்தனர்.