ஒடிஸாவில் நிச்சயம் தாமரை மலர்ந்தே தீரும் என பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அவ்வகையில், ஒடிஸாவின் சுந்தர்கர் பகுதியில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஒடிஸாவின் வளர்ச்சியை மாநில அரசே தடுத்து விட்டது. அதற்கு முக்கிய காரணம் முதல்வர் நவீன் பட்நாயக் தான். பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு பெண்களின் பாதுகாப்பில் அக்கறை கிடையாது. அதேபோன்று முன்பெல்லாம் நாடு முழுவதும் பயங்கரவாதம் பரவியிருந்தது. ஆனால், இப்போது பயங்கரவாதிகளின் இடத்துக்கே சென்று இந்தியா தாக்குதல் நடத்துகிறது.
விவசாயிகள் மற்றும் ஏழைகளின் பொருளாதார திட்டங்களை பிஜு ஜனதா தளக் கட்சி ஒடிஸாவில் தடுத்துவிட்டது. குறிப்பாக ஆயுஷ்மான் திட்டம் ஒடிஸாவில் நடைமுறைப்படுத்தவில்லை. எனவே வருகிற 2019 மக்களவைத் தேர்தல் ஒடிஸாவுக்கு மிக முக்கியமானது. ஊழல்வாதிகளை விடுத்து உழைப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து ஒடிஸா மக்கள் வாக்களிக்க வேண்டும்.
உங்களுக்கு பிரிவினை வேண்டுமா அல்லது வளர்ச்சி வேண்டுமா? உங்களுக்கு வளர்ச்சி வேண்டுமென்றால் நீங்கள் இங்கு தாமரையை மலரச் செய்ய வேண்டும். எனவே இம்முறை ஒடிஸாவில் தாமரை மலர்ந்தே தீரும். நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நிச்சயம் தாமரை மலரும் என்று தெரிவித்தார்.