புது தில்லி: விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 10 லட்சம் போலி கணக்குகள் மற்றும் பக்கங்களை முடக்கி வருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேஸ்புக்கின் இந்தியாவுக்கான மேலாண் இயக்குநர் மற்றும் துணைத் தலைவர் அஜித் மோகன் பேஸ்புக்கிற்கான தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் பொதுத் தேர்தலானது சரியாக நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அதற்காக பல்வேறு அரசு நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் மற்றும் வல்லுநர்களுடன் இணைந்து தொடந்து செயல்பட்டு வருகிறோம்.
இந்த பணியில் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட குழுக்கள் தொடர்ந்து செயல்ப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் தங்களது பணிகளை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாகவே தெளிவாகத் திட்டமிட்டு துவங்கி செயல்பட்டு வருகின்றன.
முன்னதாக பேஸ்புக்கில் வெளியாகும் அரசியல் விளம்பரங்களை வெளியிடுவது யார் என்பது தொடர்பாக கூடுதல் வெளிப்படைத்தன்மையை அறிமுகம் செய்துள்ளோம். அத்துடன் வேட்பாளரை அறிதல் மற்றும் ஓட்டுப் பதிவு தொடர்பாக இரண்டு கூடுதல் வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு வருடங்களில் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில், தேர்தல் தொடர்பான செயல்பாடுகளுக்காக கூடுதலாக இரண்டு பிராந்திய மையங்களை சிங்கப்பூர் மற்றும் டப்ளின் நகரங்களில் துவங்கியுள்ளோம் அத்துடன் 16 இந்திய மொழிகளையும் சேர்த்து மொத்தம் 24 மொழிகளில் தானாகவே மொழி பெயர்க்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழி தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, நாளொன்றுக்கு பேஸ்புக்கில் தவறான தகவல்கள் பதிவு செய்யும் சுமார் 10 லட்சம் பக்கங்கள் மற்றும் கணக்குகள் முடக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார் .