பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்களில் பாதிபேர் நாட்டு மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படாதவர்களாக உள்ளனர்.
பிரதமர் மோடியின் தற்போதைய அமைச்சரவையில் 25 பேர் உள்ளனர். அவர்களுள் அருண் ஜேட்லி, சுரேஷ் பிரபு, ரவிசங்கர் பிரசாத், ஜே.பி. நட்டா, சௌதரி பிரேந்தர் சிங், தாவர் சந்த் கெலாட், ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜாவடேகர், தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகிய 12 அமைச்சர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆவர்.
இதில், ரவிசங்கர் பிரசாத் மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் 2019 மக்களவைத் தேர்தலில் முறையே பாட்னா சாஹெப் மற்றும் அமேதி தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
மேலும் இணை அமைச்சர்களில் கே.ஜே. அல்போன்ஸ், விஜய் கோயல், மன்சுக் மாண்ட்வியா, பர்ஷோத்தம் ரூபலா, ராம்தாஸ் அதாவாலே மற்றும் ஷிப் பிரதாப் சுக்லா ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாவர்.
இவர்கள் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் மாநிலங்களவைத் தேர்தல் மூலம் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகியுள்ளனர்.
மத்திய அமைச்சரவையில் குறிப்பிட்ட எண்ணிக்கையின் அளவில் தான் மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கட்டுப்பாடுகள் கிடையாது. எனினும், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்கள் அமைச்சரவையில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.