கடந்த 55 ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக உ.பி.யில் புதன்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கடந்த 55 ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களும் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், உ.பி.யின் கடன் மட்டும் அதிகரித்தது. மேலும் நாட்டின் பாதுகாப்பை சீர்குலைப்பதிலும், வாக்கு வங்கி அரசியலில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரை தனிநாடாக பிரிக்கப்போவதாக ஒமர் அப்துல்லா கூறியுள்ளது தொடர்பாக காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜவாதி கட்சிகள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே இதில் ராகுல், மாயாவதி மற்றும் அகிலேஷ் ஆகியோர் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். பாஜக தேர்தல் வாக்குறுதியின் படி விவசாயிகளுக்கு 6 ஆயிரம் கோடி உதவித்தொகையும், விவசாயிகளின் ஓய்வு ஊதிய திட்டமும் நிச்சயம் செயல்படுத்தப்படும்.
இனியும் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை, ஏனெனில் அதனால் எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்பார். எனவே இனிவரும் காலங்களில் பயங்கரவாதிகள் ஏதேனும் சதிச்செயல்களில் ஈடுபட்டால், அவர்களின் வீடு புகுந்து அழிப்போம் என்று தெரிவித்தார்.