
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்த பிரிவினைவாத தலைவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர். மக்களவைத் தேர்தலை காஷ்மீர் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அந்த மாநிலத்தின் ஜம்மு மற்றும் பாரமுல்லா மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை முதல்கட்டத் தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த சூழ்நிலையில் பிரிவினைவாதிகள் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) தலைவர் யாசின் மாலிக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) புதன்கிழமை கைது செய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முதல் கட்டத் தேர்தலை புறக்கணிக்கும் நோக்கிலும் முழு அடைப்பு நடத்த பிரிவினைவாத அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.
இது தொடர்பாக பிரிவினைவாதிகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இந்திய மக்களவைத் தேர்தல் என்ற பெயரில் நடத்தப்படும் தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஜேகேஎல்எஃப் தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்த வேண்டும்.
தேர்தலில் பொதுமக்கள் யாரும் வாக்களிக்கக் கூடாது. மேலும், அடுத்த கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.