நமது யுத்தங்களுக்காக போரிடுபவரை தேர்ந்தெடுங்கள் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வியாழக்கிழமை கூறினார்.
91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்டமாக வியாழக்கிழமை (ஏப்.11) தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்திருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீர் வாக்காளர்கள் புத்திசாலித்தனமாக யோசித்து வாக்களிக்க வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நமக்கு உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நமது தேவைகளை பூர்த்தி செய்து, ஆதரவாகவும் செயல்பட்டு, நமது யுத்தங்களுக்காக போரிடுபவராக இருக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, 370 சட்டப்பிரிவை பாஜக நீக்கட்டும். ஆனால் அதன்பிறகு பிரதமர் மோடியின் படுவீழ்ச்சி உறுதி செய்யப்படும் என்று எச்சரிக்கிறேன். உங்களைப் போன்று எங்கள் நிலத்தை அழிக்க நினைத்த பல தலைவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஒருவேளை 370 சட்டப்பிரிவை நீக்கினால், இங்கிருந்து தேசியக் கொடி இறக்கப்படும். என்னுடைய அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் வாங்கிக்கொடுப்பேன் என்று ஒமர் அப்துல்லா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.