அனைத்து திருடர்கள் பெயரும் ஏன் மோடி ஆக இருக்கிறது.. இன்னும் எத்தனை மோடிக்கள் வெளிவர உள்ளார்கள் என்று தெரியவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
"எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அனைத்து திருடர்கள் பெயரும் ஏன் 'மோடி' ஆக இருக்கிறது. அது நீரவ் மோடி, லலித் மோடி மற்றும் நரேந்திர மோடி என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்? இன்னும் எத்தனை மோடிக்கள் வெளிவர உள்ளார்கள் என்று தெரியவில்லை.
நீங்கள் (பிரதமர் மோடி) ரூ. 30,000 கோடியை திருடி, உங்களது திருட்டு நண்பருக்கு பரிசாக அளித்துள்ளீர்கள். நீங்கள் பணம் திருடியது நூறு சதவீதம் உறுதி. பாதுகாவலர் ஒரு திருடன். நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி, லலித் மோடி, விஜய் மல்லையா, அனில் அம்பானி மற்றும் நரேந்திர மோடி என ஒரு திருடர் கூட்டமே இருக்கிறது.
மோடி இனிமேல் விவசாயிகள், வேலைகள் மற்றும் ஊழல் குறித்து பேசமாட்டார். அவரைப் போல் நாங்கள் பொய் பேச மாட்டோம்.
ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் முதல் நடவடிக்கையாக நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் மற்றும் அரசு வேலைகள் உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்" என்றார்.
இந்த கூட்டத்தில் ஏழைகளுக்கான குறைந்தபட்ச வருவாய் உறுதியளிப்பு திட்டம் குறித்தும் ராகுல் காந்தி பேசினார்.