விமர்சிக்கும் கட்சிகளுடனேயே கூட்டணி அமைப்பது தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாடிக்கை என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி விமர்சித்தார். இதுதொடர்பாக மெஹபூபா முஃப்தி ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டரில் தெரிவித்ததாவது:
தேர்தலுக்கு முன்பு அனைத்து கட்சிகளையும் நரேந்திர மோடி கடுமையாகச் சாடுவார். ஆனால், தேர்தல் முடிந்தவுடன் தனது நெருங்கிய வட்டாரங்களை அனுப்பி அதே கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தூது விடுவார். இது தான் மோடியின் வாடிக்கை. உதராணமாக 99-ல் ஒமர் அப்துல்லாவுடனும், 2015-ல் எங்கள் கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
370 சட்டப்பிரிவை பயன்படுத்தி முஸ்லிம்களையும், சிறுபான்மையினரையும் ஒழித்துக்கட்டி பாஜக தான் இந்தியாவை துண்டாட நினைக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் நடந்த பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், கடந்த 3 தலைமுறைகளாக ஜம்மு-காஷ்மீரை அழித்து, நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முஃப்தியை தோற்கடிப்பதன் மூலம் தான் மாற்றம் ஏற்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.