புது வீட்டுக்கு மாறிய காரணத்தால் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் காணாமல் போன அவலம் நடந்துள்ளது.
கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தேர்தல் தூதுவராக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் ராகுல் டிராவிட் பெயர் இடம்பெறவில்லை. சமீபத்தில் இந்திராநகர் பகுதியில் இருந்து சாந்திநகர் பகுதியில் உள்ள புதிய வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ள டிராவிட் பெயர், புதிய தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படவில்லை.
முன்னதாக, டிராவிட் சகோதரர் தனது பழைய தொகுதியில் இருந்து நீக்கும் படிவத்தை அளித்திருந்தார். ஆனால், புதிய தொகுதியில் இணைப்புக்கான படிவத்தை ராகுல் டிராவிட் வழங்கவில்லை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீக்கத்துக்கான படிவம் போன்று இணைப்புக்கான படிவத்தையும் வாக்காளர் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என பெங்களூரு தேர்தல் அதிகாரி என்.மஞ்சுநாத், இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்தார்.