புதுதில்லி: மோடியையும், பாஜக தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம் என்று தில்லி முதல்வர் அர்விந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் ஞாயிறன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் '‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் இந்த வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு தொடர்பான கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு பேசினர்.
இந்நிலையில் மோடியையும், பாஜக தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம் என்று தில்லி முதல்வர் அர்விந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்தரங்கின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நாடு தற்போது ஆபத்தில் உள்ளது. பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவையும் தோற்கடிக்க எதுவும் செய்வோம். அவர்களை தோற்கடித்து, அவர்களிடம் இருந்து நாட்டை காப்பதற்கான எங்களது முயற்சி தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தில்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கிறது.
தில்லியில் மட்டும் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஆனால் ஆம் ஆத்மியோ அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் கூட்டணி அமைக்க விரும்புவதாலேயே தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.