காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் குடும்ப அரசியல் நாட்டில் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது:
காங்கிரஸ், மஜத, மேலும் சில எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியலால் ஈர்க்கப்பட்டுள்ளன. ஆனால், பாஜகவோ தேசியவாதத்தால் ஈர்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், மஜத போன்ற கட்சிகள் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த கடைசி உறுப்பினருக்கும் பதவி சுகம் கிடைப்பதை உறுதி செய்கின்றன. ஆனால், பாஜகவோ விளிம்புநிலை மக்களை தேசிய நீரோட்டத்துக்குக் கொண்டு வருகிறது. வெளிப்படைத் தன்மை, நேர்மைதான் பாஜகவின் கொள்கையாக உள்ளது. குடும்ப அரசியல், சொந்தக் கட்சியில் உள்ள மூத்தத் தலைவர்களை ஓரங்கட்டுகிறது. பாஜகவோ தேநீர் விற்பனையாளனை பிரதமராக்குகிறது. குடும்ப அரசியல் ஏழைகளுக்கு முழக்கங்களை மட்டுமே கொடுத்தது. ஆனால், பாஜகவோ இந்தியாவில் வறுமையை வேகமாக ஒழித்தது.
பொருளாதார மேம்பாட்டின் காரணமாக இந்தியாவில் புதிய நடுத்தர வர்த்தகத்தை பாஜக உருவாக்கியுள்ளது. குடும்ப அரசியல் இடைத்தரகர்களின் கரத்தை வலுப்படுத்தியுள்ளது. ஆனால் பாஜகவோ மக்கள் நிதி வங்கிக் கணக்குகள், செல்லிடப்பேசி வசதிகளை உருவாக்கித் தந்துள்ளது. குடும்ப அரசியல் ஒரு சிலரை மட்டும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறது.
ஆனால், பாஜகவோ அனைவருடனும் அனைவருக்காகவும் வளர்ச்சியைத் தந்துள்ளது.
குடும்ப அரசியல் குடும்பத்தை மட்டும் தம்பட்டம் அடித்துக்கொள்கிறது. ஆனால், பாஜகவோ சாதாரண மக்களை கெüரவப்படுத்துகிறது. ஏழைப் பழங்குடியினருக்கு சேவையாற்றிவரும் சாதாரண நபருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவது 5 ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்திருக்கும். தனது வரலாறு மற்றும் தனது உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களை மறந்து போகும் நாடு அழிந்து போகும். நமது நாட்டுக்காக உழைத்த தியாகிகளை மோடி நினைத்தால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு உதறுகிறது.
மக்களின் ஆசி மற்றும் ஆதரவால்தான் நாட்டு நலனுக்காக முடிவுகளை துணிந்து எடுக்க முடிந்தது. கேரளத்தில் சபரிமலை ஐயப்பனை வெளிப்படையாக வணங்க முடியாத நிலையை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி உருவாக்கி வைத்துள்ளது. நமது ஆன்மிக நம்பிக்கைகளை கடைப்பிடித்தால் சிறையில் தள்ளுகிறார்கள்.
இந்தத் தேர்தல் யார் எம்.பி.யாக வேண்டும் அல்லது ஆட்சி அமைக்க வேண்டுமென்பதற்காக நடத்தப்படுவது அல்ல. மாறாக, 21-ஆம் நூற்றாண்டுக்கு இந்தியாவை எப்படி கட்டமைப்பது என்பது பற்றியதாகும் என்பதை மக்கள் மறக்கக் கூடாது.
இந்தியாவைக் கட்டமைக்க நான் நினைப்பதைச் செயல்படுத்த வேண்டுமானால், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கக் கேட்டுக்கொள்கிறேன் என்றார் அவர்.