வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: தேர்தல் ஆணையத்திடம் சந்திரபாபு நாயுடு புகார்

ஆந்திரத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலின்போது, பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான
வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு: தேர்தல் ஆணையத்திடம் சந்திரபாபு நாயுடு புகார்

ஆந்திரத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலின்போது, பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
 தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை சனிக்கிழமை சந்தித்த சந்திரபாபு நாயுடு, அவரிடம் இதுதொடர்பாக புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
 ஆந்திரத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், பல இடங்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்காளர்கள் 2 முதல் 6 மணி நேரம் வரை காத்திருந்து வாக்களித்தனர். சில இடங்களில் வாக்களிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.
 வாக்குப்பதிவு இயந்திரம் இயங்காததால், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியே வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே, பல மணி நேரமாகியும் வாக்குப்பதிவு தொடங்காத 618 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்.
 அதுமட்டுமன்றி, வாக்குச்சாவடிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாதது, சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைந்து விட்டது. பல வாக்குச்சாவடிகளில் பெயரளவுக்கு ஊர்க்காவல் படையினரும், தன்னார்வலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால், வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து, ஒருவர் உயிரிழக்க நேரிட்டது.
 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும். எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
 அதுமட்டுமன்றி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அளித்த புகாரின்பேரில், தேர்தல் நடைபெறுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, உரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்டோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். முதல்வராகிய எனக்கு பாதுகாப்பு அளித்து வந்த உளவுத் துறை டி.ஜி.யும் பணியிடமாற்றம் செய்யப்பட்டதால், எனது பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. மாநில அரசிடம் கலந்தாலோசிக்காமல், மாநில தலைமைச் செயலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதிலிருந்து, ஜனநாயக நிர்வாக நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் மீறியுள்ளது என்று அந்த மனுவில் சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com