முஸ்லிம் மக்கள் எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் வேலை வாய்ப்பு வழங்கப்படாது என்று பேசி சர்ச்சைக்குள்ளான பாஜக இணை அமைச்சர் மேனகா காந்தி, இன்று அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
வாக்களிக்கும் மக்களுக்கு ஏற்ப கிராமத்தை ஏ பி சி டி என வகைப்படுத்தியே நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று மேனகா காந்தி கூறியிருப்பது தான் அடுத்த சர்ச்சையாகியுள்ளது.
அதாவது, ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகிறது என்பதைப் பொறுத்தே அந்த கிராமத்துக்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் என்று அவர் கூறியிருக்கிறார்.
பாஜகவுக்கு எந்த கிராமத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகிறதோ அந்த கிராமம் ஏ பிரிவில் வைக்கப்பட்டு, அந்த கிராமத்துக்குத்தான் 80 சதவீத நலத்திட்டப் பணிகள் செய்யப்படும். எந்த நலத்திட்டமாக இருந்தாலும் முன்னுரிமை வழங்கப்படும். அதே சமயம் 60 சதவீதம் வாக்குகள் அளிக்கும் கிராமத்துக்கு பி பிரிவு வழங்கப்பட்டு, 60 சதவீதப் பணிகள் மேற்கொள்ளப்படும். இரண்டாவது இடத்தில் வைக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதே நிலைதான் அடுத்தடுத்து 50 மற்றும் 30 சதவீத வாக்குகள் பதிவான கிராமங்கள் சி மற்றும் டி பிரிவில் வைக்கப்படுவதும், நலத்திட்டப் பணிகள் நடைபெறுவதும்.
ஏபிசிடி அடிப்படையில்தான் அனைத்து நலத்திட்டப் பணிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று மேனகா காந்தி கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.