காரைக்குடி: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தன்மானம்முள்ளவராக இருந்தால் பதவி விலக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது மத ரீதியில் பேசியதற்காக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 3 நாள்களும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி 2 நாள்களும் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து தனித்தனியே உத்தரவு பிறப்பித்தது.
இதேபோல் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் ஆஸம் கான் 3 நாள்கள், தேர்தலுக்குப் பிறகு தன்னைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று முஸ்லிம் வாக்காளர்களை மிரட்டும் தொனியில் பேசியதற்காக, மத்திய அமைச்சர் மேனகா காந்தி 2 நாள்கள் பிரசாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், காரைக்குடி அருகே புதுவயலில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய பேச்சால் தன்னுடைய நடவடிக்கையால் பிரித்தாளும் சூழ்ச்சியை யோகி ஆதித்யநாத் கையாளுகிறார். ஆங்கிலேயர் ஆட்சிக்கும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கும் வேறுபாடு கிடையாது.
முதல் முறையாக ஒரு முதல்வருக்கு இதுபோன்ற தண்டனை கிடைத்திருக்கிறது. கொஞ்சம் தன்மானமுள்ளவராக இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.