சபரிமலை விவகாரம்: பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சபரிமலை விவகாரம் குறித்து பேசியதன் மூலமாக சமூக ரீதியாக வாக்காளர்களை தூண்டிவிடும் முயற்சியை பிரதமர்


சபரிமலை விவகாரம் குறித்து பேசியதன் மூலமாக சமூக ரீதியாக வாக்காளர்களை தூண்டிவிடும் முயற்சியை பிரதமர் மேற்கொண்டிருப்பது நடத்தை விதிகளை மீறிய செயல் என்றும், அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் நீலோத்பால் பாசு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியபோது, சபரிமலை விவகாரத்தை வைத்து இடதுசாரிகளும், முஸ்லிம் லீக் கட்சியினரும் மோசமான விளையாட்டை விளையாடிவிட்டதாக பேசினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதோடு மட்டுமல்லாமல், சபரிமலை விவகாரத்தையும், ஐயப்பன் கோயில் விஷயத்தையும் தேர்தல் பிரசாரங்களில் குறிப்பிடக்கூடாது என தேர்தல் ஆணையம் விதித்த தடையையும் அவர் மீறியிருக்கிறார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு. மக்களின் நம்பிக்கை எதிராக நாங்கள் இல்லை என்றும், உச்சநீதிமன்ற உத்தரவை மட்டுமே செயல்படுத்துகிறோம் என்றும் இடதுசாரி அரசு அவ்வபோது தெளிவாக எடுத்துக்கூறி வந்தது.
ஆனால், கேரள அரசு மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டுள்ளது என்று மோடி கூறியிருப்பது நடத்தை விதிகளை மீறியதாகும். அவர் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com