மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி), தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்க்கக் கூடாது என்று பாஜகவிடம் சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீர் பிரிவினை குறித்து பேசுவோர்களை கண்டிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், இந்தத் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி 2 வாக்குறுதிகளை அளிக்க வேண்டும்.
தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் அரசமைப்பதற்கு போதிய அளவு எம்.பி.க்களின் எண்ணிக்கை இல்லாது போகும்பட்சத்தில், ஜம்மு-காஷ்மீர் பிரிவினை குறித்து பேசுவோர்களுடன் எத்தகைய உறவையும் பாஜக ஏற்படுத்தக் கூடாது. இதேபோல், 3 தலைமுறைகளாக காஷ்மீர் மக்களை சீரழித்தவர்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லது மோடியின் அமைச்சரவையில் இடமளிக்கக் கூடாது.
தேசப் பிரிவினையை ஆதரிக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மோடி கண்டித்துள்ளார். இதேநிலையை தேர்தலுக்குப் பிறகும் தொடர வேண்டும். தேச பிரிவினையை வலியுறுத்துவோரும், அதை ஆதரிப்போருக்கும் எதிர்கால அரசியலில் இடம் கொடுக்கக் கூடாது. தேச விரோதிகளை ஆதரிப்போர், அரசியல் காரணங்களுக்காகத்தான் தேசியவாதிகளுடன் தற்போது சேர்ந்திருக்கின்றனர். இது நமது வீரர்களுக்கு இழைக்கும் அவமதிப்பாகும்.
ஜம்மு-காஷ்மீருக்கு தனியாக பிரதமர் வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். 100 ஆண்டுகள் ஆனாலும் இக்கோரிக்கை நிறைவேற போவதில்லை. மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தியும், இதே நிலையைதான் கடைப்பிடிக்கிறார். 370, 35ஏ சட்டப் பிரிவுகளை ரத்து செய்தால், இந்தியாவில் இருந்து ஜம்மு-காஷ்மீர் பிரிந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார். இதேநபர்தான், பாஜக ஆதரவுடன், ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவி வகித்தார். அவர் நீண்டகாலமாகவே, தேச விரோத மனநிலையில்தான் இருக்கிறார். அவருடன் பாஜக கூட்டணி அமைத்ததற்கு சிவசேனை ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்புத் தெரிவித்தது.
புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளை திரும்ப அழைத்து வருவது குறித்து மோடி பேசி வருகிறார். ஆனால் கடந்த 5 ஆண்டுகால பாஜக கூட்டணி அரசின் ஆட்சியில், அது நடைபெறவில்லை என்று அந்தத் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.