கருப்புப் பணத்தை ஒழிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக எந்த அரசியல் விலையும் தருவதற்கு பாஜக தலைமையிலான அரசு தயாராக உள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
2 மக்களவைத் தொகுதிகள் உள்ள கோவா மாநிலத்தில் வரும் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வடக்கு கோவா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஸ்ரீபாத நாயக்கை ஆதரித்து சுரேஷ் பிரபு செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, கருப்புப் பணத்தை ஒழிக்க, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மீண்டும் மேற்கொள்ளப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதிலளித்ததாவது:
கருப்பு பணத்தை ஒழிக்க, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மீண்டும் தேவையா, இல்லையா என்பதை இப்போது என்னால் கூற இயலாது. ஏனெனில் அது காலத்தை பொறுத்து மாறும். ஆனால், கருப்பு பணத்தை ஒழிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு உறுதியாக உள்ளது.
கருப்பு பணத்துக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக எத்தகைய அரசியல் விலையையும் கொடுப்பதற்கும் அரசு தயாராக உள்ளது.
கருப்பு பணம் பல வழிகளில் உருவாகிறது. அமைப்பு ரீதியிலான மாற்றங்களைக் கொண்டு வந்தால் அதை தடுக்கலாம். நிர்வாகத்தில் முழு வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும்போது, வரி ஏய்ப்பு செய்வதை மக்கள் தவிர்த்து விடுவார்கள் என்று சுரேஷ் பிரபு கூறினார்.