மசூத் அஸாருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் காலஅளவைத் தெரிவிக்க இயலாது: ஜெர்மனி

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை "சர்வதேச பயங்கரவாதி'யாக அறிவிக்கக் கோரி, ஐரோப்பிய யூனியனில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றப்படும்

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை "சர்வதேச பயங்கரவாதி'யாக அறிவிக்கக் கோரி, ஐரோப்பிய யூனியனில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றப்படும் காலஅளவைத் தெரிவிக்க இயலாது என இந்தியாவுக்கான ஜெர்மனி துணைத் தூதர் ஜாஸ்பர் வீக் தெரிவித்துள்ளார்.
 தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 மசூத் அஸாரை "சர்வதேச பயங்கரவாதி'யாக அறிவிக்கக் கோரி, ஐரோப்பிய யூனியனில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானம் குறித்து முடிவு செய்து வருகிறோம். இந்த விவகாரத்தில், ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
 இந்தத் தீர்மானம் நிறைவேற்றத் தேவைப்படும் காலஅளவைத் தற்போதைய நிலையில் தெரிவிக்க இயலாது. ஆனால், இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற ஜெர்மனி தீவிரமாக உள்ளது.
 மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா.வில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தீர்மானமும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். அதுவே மிகச் சிறந்த தீர்வாக இருக்கும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஐ.நா.வில் அந்தத் தீர்மானத்துக்கு தடைகள் ஏற்பட்டாலும், வரும் கூட்டங்களில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.
 பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை, "சர்வதேச பயங்கரவாதி'யாக அறிவிக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
 இதையடுத்து, மசூத் அஸாரை "சர்வதேச பயங்கரவாதி'யாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்தது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனில், ஐரோப்பிய யூனியனிலுள்ள 28 நாடுகளின் ஆதரவும் அவசியமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com