இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவும், முதல்வர் பைரன் சிங்கும் வரிசையில் நிற்காமல் சென்று வாக்களித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்குத்தான் வாக்குப்பதிவு தொடங்கியது. ஆனால் அதற்கு முன்பே ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவும், முதல்வர் பைரன் சிங்கும் தங்களது வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் நிற்காமல் நேராகச் சென்று வாக்களித்துள்ளனர். இதனை அங்கிருந்த சில வாக்காளர்கள் கண்டித்து, அனைத்து முக்கியப் பிரமுகர்களும் வரிசையில் நின்றுதான் வாக்களிக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினர்.