ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை பயணம் மேற்கொள்ளாததையடுத்து, அதில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஜம்முவுக்கும், காஷ்மீருக்கும் இடையேயான 270 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும், புதன்கிழமைகளிலும் அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை, பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாகக் கடந்த 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தத் தடை மே மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினர் எவரும் புதன்கிழமை பயணம் மேற்கொள்ளப் போவதில்லை என சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலையில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். எனினும், புதன்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலை சேதமடைந்ததால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலை சரிசெய்யப்பட்ட பிறகு, போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்றது என்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியிலுள்ள புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர், பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்திய தாக்குதலில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரின் பயணத்துக்கு எந்தவித இடையூறும் நேரக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.