ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கு அனுமதி

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை பயணம் மேற்கொள்ளாததையடுத்து, அதில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.


ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினர் புதன்கிழமை பயணம் மேற்கொள்ளாததையடுத்து, அதில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஜம்முவுக்கும், காஷ்மீருக்கும் இடையேயான 270 கி.மீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும், புதன்கிழமைகளிலும் அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை, பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படுவதாகக் கடந்த 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தத் தடை மே மாதம் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படையினர் எவரும் புதன்கிழமை பயணம் மேற்கொள்ளப் போவதில்லை என சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நெடுஞ்சாலையில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். எனினும், புதன்கிழமை காலை ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலை சேதமடைந்ததால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. நெடுஞ்சாலை சரிசெய்யப்பட்ட பிறகு, போக்குவரத்து வழக்கம்போல் நடைபெற்றது என்றனர். 
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியிலுள்ள புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர், பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்திய தாக்குதலில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரின் பயணத்துக்கு எந்தவித இடையூறும் நேரக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com