தில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பாஜக எம்.பி நரசிம்ம ராவ் மீது ஷூ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜி.வி.எல் நரசிம்மராவ். பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், எம்.பியுமான இவர் இன்று தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பத்திரிகையாளர்களுடன் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென்று நரசிம்ம ராவை நோக்கி ஷூ வீசினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரைப் பிடித்து தனியே அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஷூ வீசியவர் கான்பூரை சேர்ந்த மருத்துவர் சக்தி பார்கவ் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு எம்.பி நரசிம்ம ராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.