ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: புல்வாமா மாவட்டத்தின் திரால் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் முகாம் மீது கையெறி குண்டுகளால் பயங்கரவாதிகள் புதன்கிழமை தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகள் மூலமாக, இந்தக் கையெறி குண்டுகள், முகாமுக்குள் ஏவப்பட்டன. இந்த தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இதையடுத்து, தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர் என்றார் அவர்.
புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம், சிஆர்பிஎஃப் வாகனம் மீது வெடிபொருள்களுடன் காரில் வந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.