மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏ காளிதாஸ் கொலம்ப்கர், மக்களவைத் தேர்தலில் சிவசேனை வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் காளிதாஸ் புதன்கிழமை கூறியதாவது:
காங்கிரஸ் தலைமை மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளேன். மக்களவைத் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து கட்சி மேலிடத்தில் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. மும்பை-மத்திய தெற்கு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஏக்நாத் கெய்க்வாட் கூட பிரசாரத்துக்கு என்னை அழைக்கவில்லை. எனவே, சிவசேனை வேட்பாளர் ஷெவாலேவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளேன் என்றார்.
வடாலா சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக 6 முறை இருந்துள்ள காளிதாஸ், விரைவில் பாஜகவில் இணையலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மும்பை-மத்திய தெற்கு தொகுதியில் வரும் 29-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.