லக்னௌ: உத்தரபிரதேச மாநில மறைந்த முன்னாள் முதல்வரான என்.டி .திவாரியின் மகனான ரோஹித் தலையணையால் அழுத்திக் கொல்லப்பட்டாரா? என்று போலீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநில மறைந்த முன்னாள் முதல்வரான என்.டி .திவாரியின் மகன் ரோஹித். இவர் தில்லியில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 12ம் தேதி உத்தராகண்ட் மாநிலத்திற்குச் சென்று வாக்களித்து விட்டு ஏப்ரல் 15ம் தேதியன்று தில்லி திரும்பியுள்ளார்.
இந்நிலையில் செவ்வாய் மதியம் ரோஹித் தனது வீட்டில் மூக்கில் ரத்தம் வழிய கிடந்தார். அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை அறிவித்தது.
அவருக்கு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் அவரது மரணம் இயற்கையானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டது.
அதன் தொடர்ச்சியாக குற்றப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் வெள்ளியன்று மதியம் ரோஹித் திவாரி இல்லத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் ரோஹித் வீட்டை ஆராய்ந்தனர்.
அங்கு பொருத்தப்பட்டிருந்த 7 சிசிடிவி கேமராக்களில் 2 வேலை செய்யவில்லை. ரோஹித் மதுபான போதையில் சுவற்றைக் கைதாங்கலாகப் பிடித்து நடந்து சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.