மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதி கூட கிடைக்காது; பூஜ்யமே மிஞ்சும் என்று அந்த மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தின் பலூர்காட், கங்காராம்பூர் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்ற அவர், இதுதொடர்பாக பேசியதாவது:
கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது, மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகள் பாஜகவுக்கு கிடைத்தன. இந்த முறை, அவர்களுக்கு பெரிய ரசகுல்லாதான் கிடைக்கும். அதாவது, பெரிய பூஜ்யம்தான் கிடைக்கும். தேசிய அளவில் 100 தொகுதிகளுக்கு மேல் பாஜகவுக்கு கிடைக்காது. ஆந்திரம், தமிழகம், கேரளம் ஆகிய தென் மாநிலங்களில் ஓரிடத்தில்கூட பாஜக வெற்றி பெறாது. உத்தரப் பிரதேசத்தில் அக்கட்சிக்கு தற்போது 73 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால், இம்முறை 13 எம்.பி.க்கள் கிடைப்பது கூட கடினம். இதேபோல், வடகிழக்கிலும் ஒடிஸாவிலும் அக்கட்சிக்கு தோல்வியே மிஞ்சும் என்று மம்தா கூறினார்.
முன்னதாக, ஒடிஸாவிலும், மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு ஆச்சரியமளிக்கும் முடிவுகள் காத்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார். அவருக்கு பதிலடி கொடுத்துள்ள மம்தா, மிகப் பெரிய பூஜ்யமே அந்த ஆச்சரியம் என்றார்.