பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதத்துக்கும் தக்க பதிலடி அளிக்க வேண்டும் என்றால் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்துக்குள்பட்ட சிவமொக்கா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ராகவேந்திராவை ஆதரித்து, பத்ராவதியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசியது:
ராகவேந்திராவை சிவமொக்கா எம்.பி.யாக்குவதற்காக மட்டும் இந்தத் தேர்தல் நடைபெறவில்லை. மோடியை பிரதமர் ஆக்குவதற்காகவும்தான்.
மோடியை ஏன் மீண்டும் பிரதமராக்க வேண்டும்? இந்தியாவை பாதுகாக்க வேண்டும். பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். இந்த இரண்டும் நிறைவேற மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும் என்கிறோம்.
பாகிஸ்தானுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றால், பாஜகவை மக்கள் ஆதரிக்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் ஏப். 23-இல் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் காந்தி நகர் தொகுதியில் இருந்து நானும் போட்டியிடுகிறேன். ஆனாலும், ராகவேந்திராவின் வெற்றியை உறுதி செய்வதற்காகவே இங்கு வந்தேன் என்றார் அவர்.