பண்ணை வீட்டில் சோதனை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை பிஜு ஜனதா தள எம்எல்ஏ பிரதீப் மஹரதி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒடிஷா மாநிலம் பிபிலி சட்டப்பேரவைத் தொகுதியின் பிஜு ஜனதா தள வேட்பாளர் பிரதீப் மஹரதி. இவரது பண்ணை வீட்டில் மாஜிஸ்திரேட் ரபி நாராயண் பத்ரா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை சோதனை மேற்கொண்டது.
அப்போது, பிரதீப் மஹரதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பறக்கும் படையினர் மீது தாக்குதல் நடத்தியாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, காயமடைந்தவர்கள் புவனேஷ்வரில் உள்ள கேபிடல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, ரபி நாராயண் பத்ரா கூறுகையில்,
"பிரதீப் மஹரதியின் பண்ணை வீட்டில் பணப்பட்டுவாடா மற்றும் மது விநியோகம் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததையடுத்து விசாரிப்பதற்காக எஸ்எஸ்டியுடன் நானும் சென்றேன். அங்கு சென்ற சற்று நேரத்திலேயே, மஹரதி எங்களை விமரிசிக்க தொடங்கினார். அதன்பிறகு என்னையும், எனது குழுவையும் தாக்கினார்" என்றார்.
இதுகுறித்து பூரி மாவட்ட ஆட்சியர் ஜோதிபிரகாஷ் தாஸ் இன்று (திங்கள்கிழமை) தெரிவிக்கையில்,
"காயமடைந்த பறக்கும் படையினர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.
பிபிலி சட்டப்பேரவைத் தொகுதி பூரி மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. அங்கு 3-ஆம் கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.