கர்நாடகாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா சென்ற மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த 7 பேர் மாயமான சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் திருநாளான ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர், இவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 500-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகத்தைச் சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் 7 பேர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு மாயமான சம்பவம் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சித் தலைவரும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி கூறியதாவது:
இலங்கைக்கு சுற்றுலா சென்ற எங்கள் கட்சியைச் சேர்ந்த 7 பேரும் அங்கு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு பிறகு மாயமானது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 2 பேர் அந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக நான் இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து பேசி தகவல்களை பெற்று வருகிறேன் என்று தெரிவித்தார்.