ராகுல் வின்ஸியை தனக்கு யாரென்றே தெரியாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுலின் வழக்கறிஞர் கே.சி.கௌஷிக் திங்கள்கிழமை தெரிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள ராகுலின் படிப்பு தொடர்பான விவரம் தவறானது.
மேலும் அவருக்கு மற்றொரு நாட்டில் குடியுரிமை உள்ளது, அவரது பெயர் ராகுல் வின்ஸி போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. வயநாடு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
அதில், ராகுல் வின்ஸி என்ற பெயருடன் தான் அவரது கல்விச் சான்றிதழ்கள் உள்ளன. ராகுலுக்கு இரு நாட்டில் குடியுரிமை உள்ளது. மற்றொரு நாட்டின் பாஸ்போர்ட் கூட வைத்துள்ளார் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனால் ராகுல் வேட்புமனுவுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுலின் வழக்கறிஞர் கே.சி.கௌஷிக், செய்தியாளர்களை திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியாவில் பிறந்தவர். அவரிடம் இந்தியாவின் பாஸ்போர்ட் தான் உள்ளது. வேறு எந்த நாட்டிலும் ராகுலுக்கு குடியுரிமை கிடையாது. ராகுலின் பாஸ்போர்ட் மட்டுமல்லாது அவரது வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி உள்ளிட்ட அனைத்தும் இந்தியாவில் தான் உள்ளது.
எனக்கு ராகுல் வின்ஸி என்பவரையும், அவர் எங்கிருந்து வந்தார் என்பது போன்ற யாரையும் எனக்கு தெரியாது. கடந்த 1995-ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். அந்த சான்றிதழின் நகலையும் இத்துடன் இணைத்துள்ளேன் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளேன் என்று தெரிவித்தார்.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.