மக்களவைத் தேர்தலின் கடைசி நாள் பிரசாரத்தின் போது கேரள மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வன்முறை ஏற்பட்டது.
கேரள மாநிலத்துக்கான மக்களவைத் தேர்தல் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி அங்கு ஞாயிற்றுக்கிழமையுடன் பிசாரம் ஓய்ந்தது.
இந்நிலையில், கடைசி நாள் பிரசாரத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் கூட்டணி கட்சியினருக்கு இடையே கொல்லம் பகுதியிலுள்ள போயப்பள்ளியில் வன்முறை ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கினர். மேலும் அங்குள்ள கடைகள் மற்றும் பொருட்களையும் அடித்து நாசமாக்கினர்.
இதையடுத்து அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், லத்தியால் தாக்கியும் கலவரத்தை கட்டுப்படுதிய போலீஸார், அவர்களை விரட்டியடித்தனர்.
இதனால் அந்த மாநிலம் முழுவதும் இந்த வன்முறை சம்பவம் பிரதிபலித்தது. ஆங்காங்கே இந்த இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களிடையே பிரச்னை ஏற்பட்டது.