உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, அத்தொகுதியில் வரும் 26-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார்.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது:
வாராணசியில் மோடி 26ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறார். இதையொட்டி வாராணசியில் 25-ஆம்
தேதி பிரம்மாண்ட பேரணி நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பேரணியில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நலின் கோலி கூறுகையில், பிரதமர் மோடியை வரவேற்பதை வாராணசி மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்' என்றார்.
வாராணசி தொகுதிக்கு மே 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.