புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாரை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு சிபிஐ மற்றும் உளவுப் பிரிவு இயக்குநர்களும், தில்லி காவல் ஆணையரும் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, மிக முக்கிய வழக்குகளை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூற சதி நடைபெறுவதாக வழக்குரைஞர் பெயின்ஸ் தெரிவித்திருந்தார். அது குறித்து தன்னிடம் இருந்த ஆவணங்களை சீல் வைத்த உறையில் வைத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் பெயின்ஸ்.
இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை குறித்து, சிபிஐ இயக்குநர், உளவுப் பிரிவு இயக்குநர், தில்லி காவல் ஆணையர் ஆகியோர் இன்று பிற்பகல் 3 மணிக்கு நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் அறையில் இவர்கள் மூவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து என்னென்ன விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இவர்களுக்கு அறிவுறுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.