'பிஎம் நரேந்திர மோடி' படம் ஒரு கட்சிக்கு சாதகமாக அமையவே வாய்ப்பு: தேர்தல் ஆணைய அதிகாரிகள்

'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தை வெளியிட அனுமதித்தால், தேர்தல் நேரத்தில் அது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சாதகமாக அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தேர்தல் ஆணையம் கருதுகிறது.  
'பிஎம் நரேந்திர மோடி' படம் ஒரு கட்சிக்கு சாதகமாக அமையவே வாய்ப்பு: தேர்தல் ஆணைய அதிகாரிகள்


'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தை வெளியிட அனுமதித்தால், தேர்தல் நேரத்தில் அது குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு சாதகமாக அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தேர்தல் ஆணையம் கருதுகிறது.     

பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக் காலம் தொடங்கி, அவர் அரசியலில் தடம் பதித்தது, பிரதமராகப் பதவி வகித்தது வரையிலான வாழ்க்கை வரலாறு குறித்து உருவாகியுள்ள 'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படம், 23 மொழிகளில் நாடு முழுவதும் ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாக இருந்தது.

இந்த படத்தின் வெளியீட்டை தாமதப்படுத்த கோரி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. 

இந்த புகாரை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், 'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தை, மக்களவைத் தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று கடந்த 10-ஆம் தேதி தடை விதித்தது. 

இதை எதிர்த்து, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. 

அப்போது, முழு திரைப்படத்தையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்த்த பிறகு, படத்தைத் தடை செய்யலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து வரும் 19-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அந்த முடிவு குறிக்க அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து, 'பிஎம் நரேந்திர மோடி' படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த 18-ஆம் தேதி பார்த்தனர். அதன்பிறகு, அது தொடர்பான அறிக்கையை தேர்தல் ஆணையம் கடந்த 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்பித்தது.

அந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், அறிக்கையின் நகலை படத்தின் தயாரிப்பாளர்களிடம் பகிருமாறு தெரிவித்தது. மேலும், இந்த படத்தின் வெளியீட்டுக்கு தேர்தல் ஆணையம் விதித்த ரத்தை எதிர்த்து தயாரிப்பாளர்கள் தொடர்ந்த மனுக்களை வரும் 26-ஆம் தேதி விசாரிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. 

இந்நிலையில், மூடி முத்திரையிட்ட உறையில் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக, வெளியாகியுள்ள தகவலின்படி, படத்தை பார்த்த தேர்தல் அதிகாரிகள் இதை வெளியிட அனுமதித்தால், தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கு அது சாதகமாக அமைவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக கருதுகின்றனர். 'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படம் ஒற்றை பரிமாணத்தை கொண்டதாகவே உள்ளது. 

இதன்மூலம், தேர்தலுக்கு பிறகே இந்த படம் வெளியாக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் தெரிவித்திருக்கலாம் என்று தெரிகிறது. 

எனினும், இந்த வாதங்கள் குறித்து உச்சநீதிமன்றமே இறுதி முடிவை எடுக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com