மக்களவைத் தேர்தல் வரலாற்றில் பாஜக முதன்முதலாக 437 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
2014 மக்களவைத் தேர்தலில் பாஜக 427 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 282 தொகுதிகளில் வென்றது. அதேசமயம், காங்கிரஸ் 450 தொகுதிகளில் போட்டியிட்டு 44 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.
இந்த நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 437 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் போட்டியிடுவது இதுவே முதன்முறை. மேலும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை காட்டிலும் அதிக தொகுதிகளில் போட்டியிடுவதும் இதுவே முதன்முறை.
2014-க்கு பிறகு மக்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்ததால், அதிக இடங்களில் போட்டியிட முடிவு எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி, ஆந்திரா மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களில் பாஜக இந்த முறை கூட்டணி அமைக்காமல் போட்டியிடுகிறது.
கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் குறைவான இடங்களில் போட்டியிடுவதற்கு காரணம், பல இடங்களில் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. பிகார் மாநிலத்தில் கூட்டணி அமைத்துள்ளது. கர்நாடகாவில் கடந்த முறை அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. இந்த முறை மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்தது.
இதுபோன்ற காரணங்களால் இரண்டு கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் மாற்றம் கண்டுள்ளது.
இந்த தொகுதி எண்ணிக்கையின் மாற்றம் தேர்தல் முடிவில் எந்தவிதமான மாற்றத்தை தரும் என்பதை தெரிந்துகொள்ள மே 23-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.