சென்னை: ஏப்ரல் 30ம் தேதியும் மே 1ம் தேதியும் தமிழகத்தில் கன மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் அவ்விரு நாட்களும் தமிழகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அலர்ட் விடுத்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் இருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு தற்பொழுது வலுவான தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது.
டென்மார்க் ஒட்டியப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் வலுவான தாழ்வுப் பகுதி அடுத்து வரும் 24 மணி நேரத்தில் அதாவது 26ம் தேதி இரவு தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது, 27, 28ம் தேதிகளில் புயலாக வலுப்பெற்று தற்போதைய நிலவரப்படி வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள வலுவான தாழ்வுப் பகுதி வடதமிழகக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்தால் வரும் 30 மற்றும் மே 1ம் தேதி தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்றும், ஒருசில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 30 மற்றும் மே 1ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழையும், ஒரு சில பகுதிகளில் மிக அதிகக் கன மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததுள்ளது.
தவிக்கும் தமிழகத்தின் தாகம் தீர்க்குமா தாழ்வுப்பகுதி? என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்??
அதே போல, 26ம் தேதி முதல் கடற்பரப்பு சீற்றத்துடன் காணப்படும் என்றும், காற்றின் வேகம் அதிகமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்து பிறகு திரும்பப் பெற்றுக் கொண்டது.
அதுபோல் அல்லாமல், கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கான ரெட் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அலர்ட் என்று பார்த்ததும் தமிழக மக்கள் வானிலை அறிவிப்பை கிண்டலடிக்க வேண்டாம். ரெட் அலர்ட், அலர்ட்டாக இருக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தினால் தமிழர்கள் மகிழ்ந்திருப்பார்கள்.