மத்தியப் பிரதேச முதல்வர் கல்மநாத் மற்றும் உயரதிகாரிகளின் ஸ்விட்சர்லாந்து பயணத்துக்கு ரூ. 1.58 கோடி செலவு செய்யப்பட்டிருப்பது தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் தெரியவந்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் கடந்த ஜனவரி மாதம், உலகப் பொருளாதார அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ) வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத், அரசின் தலைமைச் செயலர் எஸ்.ஆர்.மொஹந்தி, முதல்வரின் முதன்மைச் செயலர் அசோக் பர்ன்வால், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறையின் தலைமைச் செயலர் முகமது சுலைமான் உள்ளிட்டோர் ஸ்விட்சர்லாந்துக்குப் பயணம் மேற்கொண்டனர்.
இந்தப் பயணத்துக்கான செலவு குறித்து ஊழலுக்கு எதிரான சமூக ஆர்வலர் அஜய் துபே, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட விவரங்களில் கூறியிருப்பதாவது: முதல்வர் கமல்நாத் தலைமையிலான குழுவினரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.1 கோடியே 57 லட்சத்து 85 ஆயிரம் செலவாகியுள்ளது. அதில், டாவோஸ் நருக்குச் செல்வதற்கான விமான டிக்கெட், விசா ஆகியவற்றுக்கு ரூ.30 லட்சமும், அங்குள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்குவதற்கு ரூ.45 லட்சமும் செலவாகியுள்ளது.
அதுமட்டுமன்றி, டாவோஸ் நகரில் உள்ளூர் போக்குவரத்து செலவு ரூ.9.5 லட்சமும், ஜூரிச் விமான நிலையத்தில் முக்கியப் பிரமுகர்களுக்கான அறையில் தங்குவதற்கு ரூ.2 லட்சமும், போக்குவரத்து காப்பீட்டுக்கு ரூ.50 ஆயிரமும், தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறையின் பங்களிப்பு கட்டணமாக ரூ.40 லட்சமும் செலவாகியுள்ளது.
மத்திய அரசின் தொழில் முதலீட்டுக்கு ஊக்குவிப்புத் துறையும், மத்தியப் பிரதேச அரசும் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகளைக் கவர வேண்டும் என்பதற்காகவே, டாவோஸ் நகரில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் அரசின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்காவிடில், மத்தியப் பிரதேச அரசு தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அஜய் துபே கூறியதாவது:
மத்தியப் பிரதேச மாநிலம், ஏற்கெனவே வருவாயைப் பெருக்குவதற்குப் போராடிக்கொண்டிருக்கிறது. எனவே, டாவோஸ் உச்சி மாநாட்டுப் பயணத்தை மாநில அரசு முற்றிலுமாகத் தவிர்த்து, ரூ.1.58 கோடி செலவை குறைத்திருக்கலாம் என்றார் அவர்.