கேரளத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு
கேரளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 77.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிகபட்சமாகும்.
இதற்கு முன்பாக, கடந்த 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 79.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கேரளத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மற்ற கட்சிகளுக்குக் கடும் போட்டி அளித்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்டத் தேர்தலில், கேரளத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.
இதில், பதிவான வாக்குகள் குறித்தான முழு விவரத்தைத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டது. அதில், "மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 24,970 வாக்குச்சாவடிகளில் 77.68 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதிகபட்சமாக கண்ணூர் தொகுதியில் 83.05 சதவீதம் வாக்குகள் பதிவானது. திருவனந்தபுரம் தொகுதியில் குறைந்தபட்சமாக 73.45 சதவீத வாக்குகள் பதிவானது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவதால், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற வயநாடு தொகுதியில் 80.31 சதவீதம் வாக்குகள் பதிவானது. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் 73.25 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு நடத்த, அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதால், பெரும் பரபரப்புடன் காணப்பட்ட பத்தனம்திட்டா தொகுதியில் 74.19 சதவீத வாக்குகள் பதிவாகின.
மாநிலத்தில் உள்ள 8 தொகுதிகளில் 80 சதவீதத்துக்கும் மேலான வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். இது மாநிலத்தின் அண்மைக்கால வரலாற்றில் அதிகபட்சமாகும். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மாநிலத்தில் 74.02 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.